நம்பிக்கை நோய்களைக் குணமாக்குமா?

அறிவியல் வளராத காலகட்ட்த்தில் மக்கள் நோய்களைத் தீர்த்துக்கொண்ட விதம் தெரிந்த விஷயம்.உணவு,தானியங்கள்,பழங்கள்,தாவரங்கள் வழி அவர்கள் தீர்வை அடைந்தார்கள்.பேய் ஓட்டுவது என்பதை நடைமுறையில் வைத்திருந்தார்கள்.மனநோய்களை பேய்,பிசாசு என்று நம்பி கடவுளை துணைக்கு அழைத்தார்கள்.
                                                                      அப்படி பேய் ஓட்டுவதன் மூலமாகவும் பிரச்சினைகள் தீர்ந்திருக்கிறதே? ஆமாம்,நம்பிக்கை தான் காரணம்.ஒரு விஷயத்தை உறுதியாக நம்பினால் அதற்கேற்ப மனமும் செயல்படுகிறது.பாதிக்கப்பட்டவர் மனதில் நம்பிக்கை ஏற்பட்டால் இத்தகைய விளைவுகள் சாத்தியம்தான்.

                                 கிராமத்தில் காய்ச்சல் போன்ற உடல் நலக்குறைவால் இயல்பாக இருப்பவர்களும் படுத்துவிடுவார்கள்.நாள் முழுக்க உழைத்துக்கொண்டிருந்தவர்கள் அவர்கள்.நோய் ஏற்பட்டால் ஏதும் புரியாது திணறுவார்கள்.பயத்திலும் கலக்கத்திலும் எரிச்சலான மன நிலைக்கு போய்விடுவார்கள்.
                                                                    வீட்டில் இருப்பவர்கள் குறி கேட்க போவார்கள்.எங்கோ பயந்திருக்கிறார்.ஆடு வெட்ட வேண்டும்,கோழி வெட்ட வேண்டும் என்று சாமி சொல்லும்.எனக்கு ஒரு ஆச்சர்யம்.அதிக நாட்கள் உடல் நலமில்லாமல் இருப்பவர்களுக்கு குறி கேட்கப் போனால் பயந்திருப்பதாக சொல்வதையே அதிகம் கேட்டிருக்கிறேன்.

                                 ஒரு குறிப்பிட்ட புளியமரத்தை அடையாளம் கண்டு வைத்திருப்பார்கள்.அங்கே போய் பூசை செய்து ஆடோ,கோழியோ வெட்டுவார்கள்.சிலருக்கு வசதி இருக்காது.நாலுகால் பிராணி பலி கொடுக்கவேண்டும் என்று சாமி சொல்லிவிடும்.ஆடு வாங்குவது கஷ்டம்.
                                                                       இரண்டு கோழிகளை வெட்டி பலி கொடுத்து விடுவார்கள்.நாலுகால் ஆகிவிட்ட்து! அநேகமாக அடுத்த நாளே படுக்கையில் இருப்பவர் சம நிலைக்கு வந்து வேலைக்குப் போக ஆரம்பித்து விடுவார்.நோய்வாய்ப்பட்டவரின் நம்பிக்கைதான் காரணமே தவிர பேய் அல்ல!

                                மருத்துவமனைகளுக்கு ஒரு பெரிய பிரச்சினை.யாராவது அட்மிட் ஆகிவிட்டால் உறவினர்கள் படையெடுப்பார்கள்.அரசு மருத்துவமனைகளில் நேரம் ஒதுக்கி குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே அனுமதிக்கிறார்கள்.கிராமத்தை சார்ந்தவர்கள் என்றால் பார்வையாளர்கள் அதிகம் இருக்கும்.நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம்.
                                                                    இது வேண்டாத வேலை என்றுதான் பலர் கருதுகிறார்கள்.நம்முடைய முக்கிய கலாச்சாரங்களில் இதுவும் ஒன்று.பகையாக இருந்த உறவினர்கள்கூட ஒன்று சேர்வதும் உண்டு.ஆனால் நோயாளியை பொருத்தவரை குணமடைவதற்கு இது உதவும் என்பதே நிஜம்.
                                உடல்,மனம் இரண்டிலும் ஏற்படும் பிரச்சினைகள் ஒன்றையொன்று பாதிக்கவே செய்யும்.மோசமான மனநிலையையும் இயல்பு நிலைக்கு கொண்டுவர அன்பினால் மட்டுமே முடியும்.உறவினர்கள் வருகை நோயாளியிட்த்தில் நம்மை நேசிப்பவர்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.மனதிற்கு மிகப்பெரிய தெம்பு இது.விரைவாக குணமடைய உதவும் ஒரு விஷயம்தான்.

Comments

Popular posts from this blog

பணியிடங்களில் பாலியல் தொல்லை ஆண்களுக்கு இல்லையா?

கை கழுவ சொல்லிக்கொடுங்கள்

சாருவும் தமிழ்ப்பெண்களும்