உங்களுக்கு ஜலதோஷம் பிடித்திருக்கிறதா?


சளி பிடித்த்தோ சனி பிடித்த்தோ என்று சொல்வார்கள்.இரண்டும் அவ்வளவு சீக்கிரம் நம்மை விட்டுப்போகாது என்பது நிஜம்.சனி நீண்ட காலம் ஒரு ராசியில் இருக்கும் கிரகம்.ஜலதோஷமும்,மருந்து சாப்பிட்டால் ஒரு வாரத்திலும் மருந்து சாப்பிடாவிட்டால் ஏழு நாட்களிலும் குணமாகும் என்பார்கள்.இது ஒரு வகை வைரஸ் தொற்று.(ரினோ வைரஸ்).பல்வேறு வைரஸ் நோய்களுக்கு மருந்து இல்லாத்து போலவே சளிக்கும் மருந்து கிடையாது.தலைவலி,சோர்வு,மூக்கில் ஒழுகுதல்,தொண்டையில் புண் ,தும்மல் போன்றவை இருக்கும்.தலைவலி போன்ற அறிகுறிகளை குறைக்க பாரசிட்டமால்,மூக்கில் ஒழுக ஆண்டி ஹிஸ்டமின்,இரண்டாவதாக தொடரும் தொற்றுக்களுக்கு ஆண்டிபயாடிக் மாத்திரைகளும் பரிந்துரைக்கப்படுகின்றன.போதுமான ஓய்வும்,திரவ ஆகாரங்களும் அதிகம் எடுக்க வேண்டும் என்று சொல்வார்கள்.

உடல்நலம்.

                                    இதில் மனநலமும் சேர்ந்த்துதான்.சுவறை வைத்துத்தானே சித்திரம் எழுத முடியும்.ஆரோக்கியம் இல்லாத மனிதன் வாழ்க்கையில் எத்தனை அடைந்து என்ன பயன்? சாதாரண தலைவலியிலிருந்து கொடுமையான புற்று வரை எத்தனை விதமான நோய்கள்.சில இன்னொருவரிடமிருந்து தொற்றுகிறது,சில பரம்பரையாக,உடல் இயக்க மாறுபாட்டால் வருகிறது.மனிதன் வலிந்து தேடிக்கொள்பவை என்று எத்தனை வியாதிகள்,எவ்வளவு மருந்துகள்.உடல் நலம் குறித்து பல பதிவுகளை பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.தொடர்ந்து அதைச்செய்யும் எண்ணமிருக்கிறது.இரண்டு நாட்களாக கடுமையான ஜலதோஷத்தால் பதிவு போட முடியாமல் போனது.ஆரோக்கியத்தை விட முக்கியமான ஒன்று இருக்கிறது என்பவர்கள் சளி பிடிக்குமே அப்போது சொல்லுங்கள்!

உறவுகள்.

                                குடும்பம்,சுற்றம்,நட்பு அனைத்தையும் சேர்த்துக்கொள்ளலாம். பிறப்பு முதல் இறப்பு வரை எல்லா சடங்குகளிலும் உறவுகளுக்கு முக்கியத்துவம் தந்தார்கள்.இதை பங்காளிகள் செய்ய வேண்டும்,இதை மாமன் மச்சான் செய்ய வேண்டும் என்று பிரித்தார்கள்.முக்கியமான நேரங்களில் உறவுகளின் ஆதரவும்,ஆறுதலுமே அவசிய தேவை.உறவுகளுக்காக சிலவற்றை விட்டுக்கொடுக்கலாம்.மனிதனின் மகிழ்ச்சிக்கும்,வெற்றிக்கும் உறவுகளே அடிப்படை.இதன் முக்கியத்துவம் பல இடங்களில் திருக்குறளில் இருக்கிறது,படியுங்கள்.இவை பற்றியும் சில பதிவுகளை தந்திருக்கிறேன்.

கல்வி.

             கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு
             புண்ணுடையர் கல்லா தவர்

                                 கண் இல்லாவிட்டாலும் கற்றவராக இருப்பின் கண்ணுடையவர்கள் ஆவார்கள்.கல்வி இல்லாதவருக்கு கண் இருந்தாலும் அதுபுண் தான்.பிறந்தாகி விட்ட்து.உலகத்தைப்பார்க்க கல்வி வேண்டும்.வேலை தேடுவதற்குத்தான் கல்வி என்ற பொருள் பிழையானது.இதன் பெருமைகளையும் பெரியவர்கள் சொல்லிவிட்டார்கள்.எதையும் தெரிந்து கொள்ளாமல் செத்துப்போவது போன்ற கொடுமை வேறில்லை.உண்மையான கல்வி பாடப்புத்தகத்திற்கு வெளியே இருக்கிறது என்று சொன்னார்கள்(யாரென்று நினைவுக்கு வரவில்லை).மனிதன் தன்னை மேம்படுத்திக்கொள்ள இறைவன் கொடுத்த வரம் புத்தகம் என்று ஒரு இடுகையை பகிர்ந்திருக்கிறேன்.

                                  சங்கர் குருசாமி இறை பக்தியும்,தேசப்பற்றும்,என் மீது அன்பும் வைத்திருக்கும் பதிவுலக நண்பர்.முத்தான மூன்று என்று தொடர் சங்கிலி பதிவு எழுதவேண்டுமென்று சொல்லிவிட்டார்.அதன் பொருட்டு வாழ்க்கைக்கு அவசியமான மூன்று முத்துக்கள்.

Comments

Popular posts from this blog

உயிரற்ற உறவுகள்

பணியிடங்களில் பாலியல் தொல்லை ஆண்களுக்கு இல்லையா?

கை கழுவ சொல்லிக்கொடுங்கள்