மத்தவங்க மாதிரி நாம இல்லையேன்னு நினைக்கிறீங்களா?

  மற்றவர்களோடு ஒப்பிட்டே நம்மை மதிப்பிடுகிறோம்.பக்கத்து வீட்டுக்காரர்கள் ,நண்பர்கள் ,உறவினர்கள் இவர்கள் தான் நம்முடைய அளவுகோல் .நானும் அவனும் ஒண்ணா படிச்சோம் ,ஆனா அவன் சொந்தமா வீடு வாங்கிட்டான்.அவனுக்கு நேரம் நன்றாக இருக்கிறது.மனைவி வீட்டில் பக்கபலமாக இருக்கிறார்கள்.எனக்கு அப்படி இல்லையே! .இப்படி புலம்புபவர்கள் ஏராளம்.இவை பலருக்கும் இயல்பாக இருக்கும் ஒன்று.மிகச்சிலருக்கு பெரிய பிரச்சினையாகவும் இருக்கும்.

                                                                                  தொடர்ந்து வீட்டில் இருப்பவர்களும்( குறிப்பாக மனைவி) குத்திக்காட்ட ஆரம்பிக்க வளர்ந்தவர்கள் மீது பொறாமையும்,தன் மீது கோபமும் ,எரிச்சலும் உருவாகி பலர் தன்னை தாழ்த்தி மதிப்பிட ஆரம்பித்து விடுவார்கள்.நான் எதற்கும் உபயோகமில்லாதவன்,திறமையில்லாதவன் என்ற எண்ணங்கள் அதிகமாகி தன்னைத்தானே வெறுக்கத் துவங்குவார்கள்.எதிலும் நம்பிக்கையில்லாமல் போய் தாழ்வு மனப்பான்மையால் குறுகிப்போவார்கள்.


                                                         தொடர்ந்து ஏதேனும் தோல்வியை சந்திப்பவர்கள்,எதிர்பாராத துயரம் ,நோய்,அவமானம்  போன்றவற்றிற்கு ஆளானால் தன்னை தாழ்த்தி மதிப்பிடுவதும் அதைத் தொடர்ந்து அறிவுக்குப் பொருந்தாத எண்ணங்களும் உருவாகும்.சுய மதிப்பு குறைவு என்பது மேலும் மன நிலையை சிக்கலாக்கும்.

                                                         முதுகலை பட்டதாரி இளைஞர் அவர்.பையன் படித்திருக்கிறான்,நல்ல வேலைக்கு போய்விடுவான் என்று உறவினர் ஒருவர் பெண் கொடுக்க, திருமணமாகி ஒரு குழந்தையும் ஆகிவிட்டது.அரசாங்க வேலை அவரது கனவாக இருந்தது.தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருந்தார்.ஆனால் அது லேசில் ஆகிற காரியம் இல்லை.

                                                         சம்பாதிக்காத வேலையில்லாத கணவன் மீது அவ்வளவாக மனைவிக்கு பிடிப்பில்லாமல் போய்விட்டது.தன் வயதைவிட இரண்டு வயது குறைவான இளைஞரை காதலித்து அந்த பையனுடன் ஒரு நாள் கிளம்பிப்போய் விட்டார்.மனைவி இன்னொருவருடன் ஓடிப்போனபின்னால் குழந்தையை வைத்துக்கொண்டு ! அவரது சூழ்நிலையை நினைத்துப்பாருங்கள்.


                                                         இம்மாதிரி நேரங்களில் நம்பிக்கை தருபவர்களை விட கேலி செய்பவர்களே அதிகம்.அவனுக்கு என்ன குறையோ? என்னவோ ? என்பவர்கள்தான் அதிகம்.அவமானம்,வேதனை.!என்னவெல்லாம் உணர்ந்திருப்பார்? தன்னைப்பற்றியே அவருக்கு வெறுப்பும்,கோபமும் ,குறைந்த சுய மதிப்பும் ஏற்படத்தான் செய்யும்.

                                                        மோசமான மனநிலையில் இருந்திருந்தால் அவரது வாழ்க்கையும் மோசமாகவே முடிந்திருக்கும்.ஆனால் முன்னேற்றத்தில் இன்னும் தீவிரமாக அக்கறை காட்டி அவர் அடுத்த அரசுத்தேர்வில் அரசு அதிகாரியானார்.ஓடிப்போன மனைவி அந்த இளைஞன் வீட்டாரால் அடித்து துரத்தப்பட்டார்.அரசு அதிகாரி விவாகரத்து வாங்கிக் கொண்டு வேறு திருமணமும் செய்து கொண்டுவிட்டார்.


                                                            எத்தனையோ சூழ்நிலைகளில் நம்மைப்பற்றி நாமே குறைத்து நினைக்கும் சூழ்நிலைகள் அமைந்து விடுகின்றன.மனம் தளராமல் அதை தாண்டவேண்டும்.உபயோகமற்றவராக நினைக்கும்போது ,உங்களையே தாழ்வாக நினைக்கும்போது கொஞ்சம் கற்பனை செய்துபாருங்கள்.உங்களை யாராவது எப்போதாவது பாராட்டியிருப்பார்கள்.எதற்காகவாவது புகழ்ந்திருப்பார்கள்.பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருந்தாலும் அவற்றை நினைவுக்கு கொண்டுவாருங்கள்.உங்கள் மனம் மீண்டு வரும்.

                                                             ஓய்வான நிலையில் உங்களுக்கு நீங்களே சில நல்ல கருத்துக்களை உங்கள் மனதிற்கு கொடுப்பது (auto suggestion) நல்ல விளைவுகளை தரும்.உங்களை நீங்கள் பெருமையாகவே நினையுங்கள்.நீங்களே நினைக்காவிட்டால் மற்றவர்கள் எப்படி நினைப்பார்கள்.ஒவ்வொருவரும் தனித்தன்மை வாய்ந்தவர்களே! யாருடனும் ஒப்பிடத்தேவையில்லை.

Comments

Popular posts from this blog

உயிரற்ற உறவுகள்

பணியிடங்களில் பாலியல் தொல்லை ஆண்களுக்கு இல்லையா?

கை கழுவ சொல்லிக்கொடுங்கள்