மனசுக்கு பிடிக்காத வேலையால் தவிக்கும் குடும்பங்கள்.
இளமையில் ஒவ்வொருவரும் ஏதேதோ ஆக ஆசைப்படுகிறார்கள்.ஆனால் பலருக்கும் வாய்ப்பது வேறொன்று.தன் மனதுக்கு பிடித்த படிப்பை தேர்ந்தெடுக்க பெற்றோர் விடுவதில்லை.தேர்ந்தெடுத்தாலும் படிப்புக்கு தகுந்த வேலை கிடைப்பதில்லை.
விரும்பியது கிடைக்காவிட்டால் கிடைத்த்தை விரும்ப வேண்டும் என்பார்கள்.மனதில் தேங்கிப்போன ஆசை ஏக்கமாக இருந்து கொண்டே இருப்பதுதான் அதிகம்.இருக்கும் வேலையிலும் சலிப்பையும் வெறுப்பையும் நாளடைவில் கொண்டு வந்து விடுகிறது.அங்கெ காட்ட முடியாத கோபம் குடும்பத்துக்குள் வந்துவிடும்
அவன் பெரிய பதவிகளுக்கு ஆசைப்பட்டான்.வயது ஏறிக்கொண்டிருந்த்து.உறவினர் ஒருவரது முயற்சியால் ஒரு வேலை கிடைக்க ஒட்டிக்கொண்டான்.மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த குடும்பத்தில் அடிக்கடி புயல்.காரணம் தெரியவில்லை.வேறு ஊருக்கு மாற்றலாகி போன பின்னர் சரியாகப்போனது.அலுவலகத்தில் நிலவிய அரசியலே காரணம்.
செய்து கொண்டிருக்கும் வேலையில் ஏற்படும் பிரச்சினைகளும்,அரசியலும் குடும்பத்தை அணுக்கதிர்வீச்சு போல ஊடுருவி சிதைக்கிறது.பணியிடங்களில் சக ஊழியர்களுக்குள் நிலவும் போட்டி,பொறாமை,அதிகாரிகளின் நடவடிக்கைகள் போன்றவை மனதை பாதித்து மனைவியிடமும்,குழந்தைகளிடமும் எரிந்து விழுவதாக,ஆத்திரப்படுவதாக முடிகிறது.
ஒரே வேலையை திரும்பத்திரும்ப செய்வது யாருக்கும் சலிப்பு ஏற்படுத்தக்கூடிய ஒன்று.பணியில் முன்னேற்றமில்லாத நிலையும் விரும்பத்தகாத விளைவுகளையே உருவாக்குகிறது.இதில் கவனிக்க வேண்டிய ஒன்று,கோபம் ஆத்திரம் எல்லாவற்றுக்கும் வடிகால் குடும்பம்தான்.
மனசுக்கு பிடிக்காத வேலையால் எளிதில் சோர்வடைவது,மனம் பாதிக்கப்படுவதால் உடலும் கெட்டு,தலைவலி,உடல்வலி,தூக்கமின்மை கஷ்டங்கள்,உடன் பணிபுரிபவர்களிடம் தகராறு,எரிச்சல்,சிடுசிடுப்பு, போதைக்கு முக்கியத்துவம் கொடுத்து அடிமையாவது,வேலையிலும் கவன தடுமாற்றம் போன்றவையும் மற்ற விரும்பத்தகாத விளைவுகள்.
இப்படிப்பட்ட சூழ்நிலைகளை எப்படித்தான் சமாளிப்பது? சிலரை பார்த்திருக்கிறேன்.”சுத்தமாக வேலை பிடிக்கவில்லைதான்,குழந்தைகளைக்காக,குடும்பத்திற்காக அட்ஜஸ்ட் செய்து போகிறேன் என்பார்கள்.இது போன்ற முடிவுகள் கொஞ்சம் உதவும்.
பொதுவாக உண்மையை புரிந்து கொள்வது நல்லது.வேறு வழியில்லாமல் இந்த வேலைக்கு வந்திருக்கிறோம்.இதுதான் சோறு போடுகிறது.இதை தக்க வைத்துக்கொள்ள வேண்டும்.இந்த எண்ணம் ஏற்பட்டால் நல்லது.வாழ்க்கைமுறையையும் மாற்றிக் கொள்ளலாம்.யோகா,உடற்பயிற்சி,குடும்பத்துடன் வெளியில் செல்வது,சத்தான உணவு,நல்ல பொழுதுபோக்குகளை கொண்டிருத்தல்(புத்தகம் படிப்பது,இசை கேட்பது)போன்றவை வெளியில் வர உதவும்.
அதிகம் தங்களை வெளிப்படுத்திக்கொள்ளாத ஆட்கள்,யாருடனும் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளாதவர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.மனைவியிடம்,நல்ல நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டால் இதை எளிதில் கடக்கலாம்.நாளை திங்கட்கிழமை வேலைக்கு போகவேண்டுமே என்று யோசிக்கிறீர்களா? உங்களுக்கு விருப்பமில்லாத வேலையில் இருக்கிறீர்கள்.கவனம் தேவை.



Comments
Post a Comment