சட்னி,சாம்பார் சாப்பிடுவீங்களா? இதப்படிங்க!
நண்பர் ஒருவர் சுகாதாரம் பேணுவதில் வல்லவர்.எப்போதும் கொதித்து ஆறிய நீர் மட்டுமே பருகுவார்.அதிகம் தண்ணீர் குடிப்பது நல்லது என்று பல சஞ்சிகைகளில் படித்த்தன் விளைவு அதை கடைப் பிடிக்க ஆரம்பித்துவிட்டார்.அநேகமாக மருத்துவம் தொடர்பான எல்லா புத்தகங்களும் அவரிடம் இருக்கும்.
அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டி வந்து விட்ட்தால் அவர் வீட்டிலிருந்து எடுத்துவரும் நீர் போதவில்லை.அலுவலகத்தில் குடிநீர் தயாரிக்கும் எந்திரம் ஒன்றை நிறுவ முடிவு செய்தார்.பணியாளர்கள் அனைவரிடமும் பணம் வசூல் செய்ய ஆரம்பித்துவிட்டார்.சிலர் முனக ஆரம்பித்தார்கள்.
சுத்தமான குடிநீர் பற்றிய அவரது பேச்சை கேட்டு யாரும் மறுக்கவில்லை.விடமாட்டான் என்று நினைத்தார்களோ என்னவோ! அலுவலகத்தில் சுத்தமான குடிநீர் தயார்.சுடுநீரும்,குளிர் நீரும் எல்லாம் தயார்.கொஞ்ச நாள் கழித்து திடீரென்று நான்கு நாள் விடுப்பு என்று சொன்னார்கள்.உடல்நலம் சரியில்லையாம்.அவருக்கு சர்க்கரை,ரத்தக்கொதிப்பு போன்ற நோய்கள் எல்லாம் இல்லை.
சில தின்ங்கள் கழித்து அவரை சந்தித்தேன்.உடல் வற்றிப்போய் விட்ட்து போல் தெரிந்த்து.ரொம்ப சோர்வாக இருந்தார்.சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.இட்லி,சட்னி,சாம்பார்.”டைபாய்டு வந்து விட்ட்து.கஷ்டப்பட்டுவிட்டேன்.எவ்வளவு சுத்தமாக இருந்தேன்.விதியை யாரும் ஒன்றும் செய்ய முடியாது!” என்றார்.
”டிபன் எங்கே வாங்கினீர்கள் ”என்று கேட்டேன்? ”வரும் வழியில் ஒரு மெஸ்ஸில்தான்.அங்கே அதிகம் காரம் போடமாட்டார்கள்.நன்றாகவும் இருக்கும்!காலையில் வீட்டில் சாப்பிட நேரம் இருப்பதில்லை.எப்போதாவது சாப்பிட்டுப்பாருங்கள்.ஏன் கேட்கிறீர்கள்?”என்றார்.”நீங்கள் சாப்பிடும் சட்னியில் தண்ணீர் கலந்திருக்கிறார்களே அது கொதிக்கவைக்கப்பட்ட நீரா?” அவருக்கு விஷயம் புரிந்துபோய்விட்ட்து.
நண்பர்களைப் போன்றே பலரைப் பார்த்திருக்கிறேன்.சாதாரண ஹோட்டல்களில் சாப்பிடும்போது கூட வீட்டிலிருந்து எடுத்துவந்த நீரை பக்கத்தில் வைத்திருப்பார்கள்.அல்லது பாட்டில் ஒன்றை வாங்குவார்கள்.அதுவும் தரமான பிராண்ட்.ஆனால் சட்னியை பிசைந்து உள்ளே தள்ளிக்கொண்டிருப்பார்கள்.
சட்னி மட்டுமல்ல பழரசம் போன்றவையும் இப்படித்தான்.ஆப்பிள்,ஆரஞ்சு,மாதுளை ஜூஸ் எல்லாம் உடலுக்கு நல்லதுதான்.ஆனால் அவற்றில் கலக்கும் தண்ணீர் உடலுக்கு நன்மை பயக்கும் என்று சொல்ல முடியாது.இருபது லிட்டர் கேன்கள் தான் இப்போது எங்கும் பரவலாக உள்ளன.அவற்றில் பெரும்பாலானவை தரமற்றவை என்று செய்திகள் வருகின்றன.
வளரும் நாடுகளில் எண்பது சதவீத மரணங்கள் சுகாதாரமற்ற குடிநீரால் ஏற்படுகின்றன என்கிறது உலக சுகாதார நிறுவன அறிக்கை.குழந்தைகள் உயிரிழப்பிற்கு வயிற்றுப்போக்கே முக்கிய காரணமாக அமைந்துள்ளது.டைபாய்டு,வயிற்றுப்போக்கு,குறிப்பிட்ட வகை மஞ்சள் காமாலை,வாந்திபேதி,அமீபா தொற்று போன்றவை முக்கியமான நீர்வழி பரவும் நோய்கள்.
குடிநீரில் கலந்திருக்கும் வேதிப்பொருட்கள் இன்னொரு பிரச்சினை.நைட்ரேட்கள்,ஆர்சனிக் போன்ற பல்வேறு வேதிப்பொருட்களும் புற்றுநோயை தூண்டும் தன்மை கொண்டவை.சுத்தமான நீர் என்பது கனவாகிவிட்ட சூழலில் வீட்டில் தயாரிக்கப்படுவதே சிறந்த்து.தவிர்க்கமுடியாமல் வெளியில் சாப்பிட நேரும்போது கொதிக்க வைக்கப்பட்ட உணவுகளை தேர்ந்தெடுப்பது நல்லது.



Comments
Post a Comment