பத்திரிகையும்,டி.வி.யும் தற்கொலையைத் தூண்டுகிறதா?


அடுத்தடுத்த தற்கொலைகள் தமிழகத்தை உலுக்கிக் கொண்டிருக்கிறது.ஒரு கல்லூரி மாணவி,இரண்டு பள்ளி மாணவிகள் தூக்கிட்டும்,தீக்குளித்தும் தங்களை மாய்த்துக் கொண்டார்கள்.இதெல்லாம் உங்களுக்கு தெரிந்த செய்திதான்.தற்கொலைகள் பரபரப்பாக ஊடகங்களில் இடம் பிடித்த்து.தலைப்பு செய்திகளில்!தமிழகத்தில் இதைப் பற்றி பேசாதவர்கள் இருக்க மாட்டார்கள்.

தற்கொலைகளுக்கு முக்கிய காரணம் மனச்சோர்வுதான் என்கிறது உளவியல்.வாழ்க்கையில் ஏற்படும் தோல்வி,துயரம்,இழப்பு போன்றவை ஒருவருக்கு மனதில் பாதிப்பை உருவாக்கி மன அழுத்த்த்தை ஏற்ப்படுத்தி விடுகிறது.தொடர்ந்து வாழ்வில் ஈடுபாடு கொள்ளாமல் ஒருவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்யலாம்.பெரும்பாலான தற்கொலைகள் நன்கு திட்டமிட்டே நடக்கும்.

மாணவிகள் அனைவரும் டீனேஜ்’.மற்றவர்கள் அங்கீகரிக்க வேண்டும்,தான் மதிக்கப்படவேண்டும்,பேசப்படவேண்டும் என்பதற்காக எதெதையோ செய்யும் வயது.அதிலும் பெண்களுக்கு ஒரு அவமானமென்றால்?.நமது சமூகம் திருடனை ஏற்றுக் கொள்ளும்,திருடியை ஏற்றுக் கொள்ளாது.தனது இமேஜ்பாதிக்கப் படுவதை வாழ்க்கை முடிந்து போய் விட்ட்தாகவே உணர்வார்கள்.

ஒரு குடும்பத்தில் ஏற்கனவே அக்குடும்பத்தின் உறுப்பினர்களோ,உறவினர்களோ தற்கொலை செய்து கொண்ட வரலாறு இருந்தால் அக்குடும்பத்தைச் சார்ந்த ஒருவர் மனச் சோர்வால் பாதிக்கப் படும்போது தற்கொலை செய்து கொள்ளும் வாய்ப்பு அதிகம்.ஏன்? மனச்சோர்வு சிலருக்கு மரபணுக்கள் காரணமாகவும் வரலாம் என்கிறார்கள்.இன்னொரு விஷயம் இருக்கிறது.

இரண்டாவது முறையாக தற்கொலைக்கு முயன்ற ஒருவரை நிபுணர் ஒருவர் ஆலோசனைக்கு உட்படுத்தினார்.முடிவில் அவர் கண்டறிந்த்து,தற்கொலைக்கு முயன்றவரின் சிறு வயதில் அவரது தம்பி இறந்து விட்டார்.குடும்பம் முழுதும் சோகத்தில் ஆழ்ந்திருக்கும் நேரம்.பாவம் அந்த பையனை யாரும் கண்டுகொள்ளவில்லை.பசியைக்கூட யாரும் கவனிக்கவில்லை.எல்லோரும் இறந்து போனவனைப் பற்றித்தான் பேசினார்கள்.

அந்த இளம் வயதில் சிறுவனுக்குத் தோன்றிய எண்ணம்-என்னை பிறர் கவனிக்க வேண்டும் என்றால் நான் சாக வேண்டும்.இந்த எண்ணம் பெரியவர் ஆன பின்னும் அவரிடம் தற்கொலை எண்ணத்தை தூண்டியவாறே இருக்கிறது.சினிமாவில் பார்த்திருப்பீர்கள்-ஜோதிகாவை நினைத்துக் கொள்ளுங்கள்-சிறுவயது அனுபவங்கள் மனதில் எத்தகைய மாற்றத்தை உருவாக்குகிறது என்பதை.

இப்போது உங்களுக்கு தலைப்பின் பொருள் புரிந்திருக்கும்.ஒரே கிராமத்தில்,ஒரே குடும்பத்தில் தொடர் தற்கொலைகளை கவனித்திருக்கிறேன்.கல்லூரி மாணவி பற்றிய செய்திகள்,இரண்டு பள்ளி மாணவிகளுக்கு முன்னுதாரணமாக இருந்திருக்கலாம் என்றே நான் எண்ணுகிறேன்.மற்ற இரண்டு மாணவிகளின் வயது பதிமூன்று,பதினான்கு தான்.

நாம் கல்லூரி மாணவி போல பேசப்படுவோம் என்று நினைத்திருக்கலாம்,ஆசிரியையை பழி வாங்கியது மாதிரியும் இருக்கும்.ஆனால் மாணவிகள் தற்கொலை பரபரப்பான செய்தி! ஊடகங்களில் வெளியிடாமல் இருக்க முடியுமா?ஏற்கனவே விவசாயிகள் தற்கொலை பற்றிய பதிவிடும்போதே சிந்தித்தவை.இவை.விட்டு விட்டேன்.என்ன செய்யப் போகிறோம்?


Comments

Popular posts from this blog

உயிரற்ற உறவுகள்

பணியிடங்களில் பாலியல் தொல்லை ஆண்களுக்கு இல்லையா?

கை கழுவ சொல்லிக்கொடுங்கள்