ஜோக் படித்தால் சிரிப்பு வருகிறதா? இல்லையா?

  நகைச்சுவை  ஒன்றை படித்தால் சிரிப்பு வரத்தானே வேண்டும்.ஆமாம் ,அது மனிதனுக்கு கிடைத்த முக்கியமான விஷயம்.அது சுமாராக இருந்தால் கூட! அவ்வளவாக ரசிக்க முடியாமல் போனால் யோசிக்க வேண்டும்.கீழே உள்ளதையும் படியுங்கள்.

  ஆசிரியர்: ஏன் வீட்டுப்பாடம் எழுதவில்லை?

  மாணவி:கரண்ட் இல்ல !

  ஆசிரியர்:மெழுகுவர்த்தி வைத்து எழுத வேண்டியதுதானே?

   மாணவி:தீப்பெட்டி சாமி ரூம்ல இருந்தது! எடுக்க முடியல!

   ஆசிரியர் :ஏன்?

  மாணவி: குளிக்கல! அதனால சாமி ரூமுக்குள்ள போக முடியல!

  ஆசிரியர் :ஏன் குளிக்கவில்லை?

  மாணவி: லூசா நீங்க? அதான் கரண்ட் இல்லேன்னு மொதல்லயே சொன்னனே!?


                                                          இப்படி சாதரணமாக இருந்தாலே ஓஹோவென ரசிப்பவர்கள் உண்டு.வெடி ஜோக் சொன்னாலும் சிரிப்பு வரவில்லையா? நீங்கள் மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டிருக்கலாம்.சிலர் ஏதேனும் கவலையாக இருந்தாலும் உற்சாகமில்லாமல் இருப்பார்கள்.மனச்சோர்வு என்பது சாதாரண கவலையிலிருந்து அதன் கால அளவுகளில் வேறுபடுகிறது.பாதிப்பு நீண்ட காலம் இருக்கும்.

                                                           மனதில் ஏற்படும் சோர்வு என்பது இயல்பு வாழ்க்கையை பாதிக்கக் கூடியது.உறவுகளை பேணுவதில்,சிந்திப்பதில் செயல்படுவதில் சிக்கலை ஏற்படுத்துகிறது.தூங்குவதிலும் பாதிப்பு இருக்கும்.காலம் காயங்களை ஆற்றும் என்பார்கள்.நமக்கு ஏற்படும் எந்த துயரமும் காலம் செல்ல செல்ல குறைந்து விடும்.சிலரால் மீண்டு வரமுடியாமல் போய்விடுகிறது.


                                                          இன்றைய நவீன வாழ்க்கையில் எதைஎதையோ யோசித்து குழப்பிக்கொள்கிறோம்.அழுத்தங்கள் அதிகமாகிவிட்டது.பரம்பரை முக்கிய காரணமாக கருதப்பட்டாலும் சூழ்நிலைகள்,மருத்துவ காரணங்கள்,வாழ்வில் நடந்த சம்பவங்கள் போன்றவை முக்கிய காரணமாக இருக்கின்றன.நாம் சிந்திக்கும் முறையும் மன அழுத்தத்தை உருவாக்கும் காரணியாக இருக்கிறது.

                                                          அதிகம் சம்பாதிக்கும் இளைய தலைமுறை பாதிக்கப்படுவது கூடி வருகிறது .இதை ஆய்வுகளும் உறுதி செய்கின்றன.மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் மதுவுக்கு அடிமையாகி பாண்டிச்சேரியில் சுற்றித்திரிந்தது பற்றி செய்திகளில் படித்திருப்பீர்கள்.


                                                              கௌரவம்,மதிப்பு ,நல்ல வருமானம் இத்தனை இருந்தும் ஏன் பாதிக்கப்படவேண்டும்? மனம் என்பது ஒரு சிக்கலான பிரமாண்டம்.சுற்றி உள்ள நண்பர்கள்,உறவினர்கள் யாராவது ஆரம்பத்திலேயே கவனித்திருந்தால் ,அவர்களுக்கு விழிப்புணர்வு இருந்திருந்தால் ஆரம்பத்திலேயே சரி செய்திருக்கவும் முடியும்.

                                                               மனிதன் உயிர்வாழ்வதில் அர்த்தத்தை தருவது அன்பு.ஆனால் இன்று மனதில் உள்ளதை வெளிப்படுத்தக் கூட முடியாத நிலை.பணத்திற்காக ஓடிக்கொண்டிருக்கிறோம்.மனச்சோர்வும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.உடலையும் மனதையும் பலவீனப்படுத்துவது மன அழுத்தம்.


                                                                எதிலும் ஆர்வமில்லாமல் இருப்பது,சுகாதாரத்தில் கூட அக்கறை காட்டாமல் இருப்பது,மிதமிஞ்சிய மதுப்பழக்கம்,சரியாக சாப்பிடாமல் இருப்பது,அல்லது அதிகம் உண்பது,தூக்கமின்மை கோளாறுகள் இருந்தால்,கவனிப்பவர்கள் உதவுவது அவசியம்.

                                                                 மனதில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு அருகில் உள்ளவர்கள் அன்பு முக்கியமான மருந்து.மன அழுத்தம் மிதமாக இருந்தால் ஆலோசனைகள் மூலமாகவே தீர்வு காண முடியும்.அதிகமாக இருந்தால் மருத்துவ உதவி தேவைப்படும்.கிண்டல் ,கேலி செய்யாமல் அணுக வேண்டும் என்பது முக்கியம்.டிப்ரஷன் ,மன அழுத்தம் ,மனச்சோர்வு எல்லாம் ஒரே பொருள்தான்.

Comments

Popular posts from this blog

உயிரற்ற உறவுகள்

பணியிடங்களில் பாலியல் தொல்லை ஆண்களுக்கு இல்லையா?

கை கழுவ சொல்லிக்கொடுங்கள்