என் கம்யூனிஸ்ட் நண்பருக்கு என்ன ஆச்சு?

  உறவினர் மூலமாக  என்னுடைய இருபதாவது வயதில் அந்த நண்பரை சந்தித்தேன்..ரொம்ப தைரியம்.நாட்டைப்பற்றியும் ,ஏழைகள் படும் பாடு பற்றியும் அவர் பேசும்போது கேட்டுக்கொண்டே இருக்கலாம் என்று தோன்றும்.அவர் வீட்டுக்கு போனபோது ஒரு அலமாரி முழுக்க புத்தகங்கள் ,புத்தகங்கள்.!

                                                       குழந்தைகளை தூக்குவது போல ஒவ்வொன்றாக எடுத்து பார்த்தேன்.''படிக்கணும்னு ஆசை இருந்தா எடுத்துக்கோங்க!'' படித்த பின்னால் திருப்பிக்கொடுத்துவிடுங்கள் ".எனக்கு சந்தோஷமாகிவிட்டது.நான் எடுத்து வந்த புத்தகத்தில் ஒன்று மக்சீம்கார்க்கியின் "தாய் ".உலகப்புகழ்பெற்ற காவியம் என்று எனக்கு அப்போது தெரியாது.படித்து முடித்தபின்னால் எனக்கு நாவல்கள் படிக்கும் ஆர்வம் அதிகமாகி விட்டது.மனசுக்குள் எதையோ கலந்து விட்டது.இன்னதென்று உணரமுடியவில்லை.



                                                     அவரிடமிருந்து ஏராளமான புத்தகங்களை எடுத்து வந்திருக்கிறேன்.படித்திருக்கி
ேன்.அவரிடம் அடிக்கடி இந்திய அரசியலையும் ,நாட்டு நடப்பையும் கேட்டு விவாதிப்பது எனக்கு பிடித்தமான ஒன்றாக ஆகிவிட்டது.பல மாதங்கள் இது தொடர்ந்தது.வெகு  காலத்துக்கு அவரை சந்திக்க முடியவில்லை.

                                                      ஒரு வருடம் கழித்து என் உறவினரை சந்தித்தபோது அவர் பெற்றோரின் அனுமதி இல்லாமல் காதல் திருமணம் செய்து கொண்டுவிட்டார் என்ற தகவலை சொன்னார்.மனைவியுடன் கோவைக்கு குடிபெயர்ந்து விட்டார் என்றார்.

                                                     எனக்கு ஓட்டு மொத்தமாக பெற்றோர்கள் மீது இருந்த ஆத்திரம் இன்னும் அதிகமாகிவிட்டது.இந்த காதலை ஏன்தான் பெற்றோருக்கு பிடிக்காமல் போகிறது?அதற்குப்பிறகு பல ஆண்டுகள் கழித்து எதேச்சையாக சேலம் பேருந்து நிலையத்தில் அவரை சந்தித்தேன்.நல்ல தொப்பையுடன் வளமாக இருந்தார்.



                                                      ஒருவருக்கொருவர் நலம் விசாரித்த்பிறகு நான் எதிர்பாராத அந்த வார்த்தையை சொன்னார்."ஏதாவது உருட்டி புரட்டினாத்தான் இந்தக்காலத்தில் பிழைக்க முடியும் .என்ன சொல்கிறீர்கள்? அவரை உற்றுப்பார்த்தேன்.யோசனையுடனே தலையாட்டினேன்.இருவரும் காபி குடித்தோம்.அப்போது அவர் மேலும் பேசியதை வைத்து நான் முடிவு செய்துவிட்டேன்.

                                                       சமுதாயத்தின் மீது அக்கறை,நாட்டுப்பற்று எல்லாமும் அவரிடம் காணாமல் போயிருந்தது.பிழைப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற மனநிலைக்கு அவர் வந்திருந்தார். அவருக்கு என்ன ஆனது? சில பேரைக்கேட்டால் கல்யாணம் ஆகிவிட்டது என்பார்கள்.அது மட்டுமே உண்மையா?



                                                        பின்னர் இதெல்லாம் சாதாரணம் என்று ஆகிவிட்டது.அதற்குப்பிறகு நான் பலரை பார்த்தேன்.குறிப்பிட்ட வயதுகளில் இருக்கும் ஆர்வமும்,நல்லகுணமும் எப்படியோ காணாமல் போய் விடுகின்றன.அவர்கள் சும்மா இருந்தாலும் சுற்றி இருப்பவர்கள் விடுவதில்லை.

                                                        உடற்பயிற்சியாக இருக்கும் என்று ஒரு கிலோ மீட்டர் உள்ள அலுவலகத்துக்கு நடந்தே போக ஆரம்பித்தார் அந்த அதிகாரி.இருபதடி தூரத்துக்குள் மூன்று பேர் கேட்டுவிட்டார்கள்."அய்யா வண்டி ரிப்பேரா?" அடுத்த இரண்டடியில் பணியாளர் ஒருவர் "அய்யா உட்காருங்க ! வண்டி ரிப்பேரா? ஆட்டோல போயிருக்கலாமில்ல சார்!

                                                         பலருக்கு பதில் சொல்லிக்கொண்டிருப்பதைவிட இந்த பழக்கத்தையே விட்டுவிடலாம் என்று தோன்றிவிடுகிறது.நான் இப்படித்தான் இருப்பேன் என்று உறுதியுடன் சமூகத்தை எதிர்கொள்ள ரொம்ப தைரியம் தேவை.அது எல்லோருக்குமா வாய்த்து விடுகிறது?

Comments

Popular posts from this blog

உயிரற்ற உறவுகள்

பணியிடங்களில் பாலியல் தொல்லை ஆண்களுக்கு இல்லையா?

கை கழுவ சொல்லிக்கொடுங்கள்