தினமும் தலைக்கு குளிக்கலாமா? கூடாதா?

                                 புதிதாய் பிறந்த குழந்தைக்கு தலைக்கு குளிப்பாட்டுவது பெரும்பாலான இடங்களில் ஒரு சடங்கு.சுற்றத்தாரை அழைத்து விருந்து வைப்பார்கள்.புண்ணியார்ச்சனை செய்யும் வழக்கமும் சில இடங்களில் இருக்கிறது.குளித்தால் தோலில் சேர்ந்துள்ள அழுக்குகள் சுத்தமாகி உடலின் மிகப்பெரிய உறுப்பான தோல் ஆரோக்கியம் பெறும்.உடல் அதிக வெப்பம் அடையும்போது வியர்வை மூலம் உடல்வெப்ப நிலையை சீராக்குவது தோல்தான்.

                                 தினமும் தலைக்கு குளிப்பது சரியல்ல என்று பெரும்பாலான இந்தியமுறை மருத்துவர்கள் சொல்கிறார்கள்.தலையில் நீர் கோர்த்துக்கொள்ளும்,சிலேத்தும சம்பந்தமான நோய் ஏற்படும் என்று கூறியதை படித்திருக்கிறேன்.எனக்கு தலைக்கு குளிக்காவிட்டால் குளித்து முடித்த உணர்வே ஏற்படுவதில்லை.

                                  தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பதும் நம்முடைய மரபுதான்.தீபாவளிக்கு பெரும்பாலும் எண்ணெய்க்குளியல் முக்கியத்துவம் பெற்றது.புது மாப்பிள்ளைக்கு மாமன் அல்லது மச்சான் முறை உள்ளவர்கள் எண்ணெய் தேய்த்து விடுவார்கள்.ஆகாத மாப்பிள்ளையாக இருந்தால் தலையில்,உடலில் வேகமாக அடித்து ஆத்திரத்தை தீர்த்துக்கொள்வார்கள்.

                                 எண்ணெய்க்குளியலுக்கு வெந்நீர் பயன்படுத்த்வேண்டும் என்பார்கள்.(வீட்டில்தான் அருவிகளில் அல்ல.).தயிர் உள்ளிட்ட குளிர்ச்சியான பொருளும் சாப்பிடமாட்டார்கள்.வாரத்துக்கு இரண்டு முறையோ,மூன்று முறையோ தலைக்கு குளிப்பவர்களை அதிகம் பார்த்திருக்கிறேன்.பெண்கள் வெள்ளிக்கிழமை தலைக்கும்,ஆண்கள் சனிக்கிழமையும் தலைக்கு குளித்துவிட்டு விரதம் இருப்பது வழக்கம்.

                              பொடுகுத்தொல்லை இருப்பவர்கள்  தினமும் தலைக்கு குளிக்கலாம் என்பதே எனது கருத்து.குறைவாக இருந்தால் கடையில் விற்கும் ஷாம்பூக்களே போதும்.அதிகமாக இருக்கும்போது வீரியமான ஷாம்பூ தேவைப்படும்.இதில் முடி உடையும்.அரப்புத்தூள்,சிகைக்காய் பயன்படுத்துவது இப்போதெல்லாம் குறைந்துபோய் விட்ட்து.

                          ஷாம்பு மட்டுமல்ல சோப்பும் அடிக்கடி மாற்றி உபயோகிப்பது நல்லதல்ல.தோல் அலர்ஜி உள்ளிட்ட தேவையில்லாத பிரச்சினைகளை கொண்டுவரும்.மதுரை நண்பர் ஒருவர்,இப்போது மத்திய அரசு நிறுவனத்தில் நல்ல வேலையில் இருக்கிறார்.கடலை  மாவுதான் பயன்படுத்துவார்.பயித்தம்பருப்பு மாவும் நல்லதே!

                              வெந்நீரை விடவும் தண்ணீரில் குளிப்பது நரம்புகளை வலுவாக்கி,சுவாச கோளாறுகளை நீக்கும் என்று எங்கோ படித்திருக்கிறேன்.நான் வெந்நீரில் குளிப்பதில்லை.சோப்பு போட்டபின் கீழிருந்து மேலாக தேய்த்து குளிப்பதுதான் சரியான முறை.வெயில் காலத்தில் இரண்டு முறை குளிப்பது அவசியம்.

                              உடல் முழுக்க நமைச்சல் என்று மருத்துவரிடம் வந்தார் ஒருவர்.கடைசியாக எப்போது குளித்தீர்கள்என்று கேட்டார் டாக்டர்.கொஞ்ச நாளாகிறது என்று பதில் வந்த்து.குளித்தாலே நோய் சரியாகப்போய்விடும்என்று திருப்பி அனுப்பிவிட்டார்.கோயில் குளங்களில் குளிப்பவர்கள்,உடனே நல்ல தண்ணீரில் குளித்துவிடுவது உகந்த்து என்கிறார்கள்.இன்னமும் மாட்டையும் குளிப்பாட்டிக்கொண்டு,தானும் குளத்தில்,ஆற்றில் குளிக்கும் கிராமத்து ஆட்கள் உண்டு.

                                குஷ்வந்த்சிங்கின் இளமைக்கால சம்பவம் ஒன்று.விடுதியில் கொஞ்சம் அடாவடியான மாணவன் ஒருவன்,யார் புதிதாக சோப்பு வாங்கி வைத்தாலும் எடுத்து போட்டுக்கொள்வது வழக்கம்.குஷ்வந்த்சிங்,ரோமத்தை நீக்கும் சோப்பு ஒன்றை வாங்கி குளியலறையில் வைத்துவிட்டார்.வழக்கம்போல புதிய சோப் என்று அம்மாணவன் உடல் முழுக்க தேய்க்க முடியெல்லாம் உதிர்ந்துபோய்விட்ட்து.அவனை கண்டுபிடித்து என்ன செய்கிறேன் பார் என்று ஆத்திரத்திலேயே இருந்தும் கடைசிவரை கண்டுபிடிக்கவில்லையாம்.

Comments

Popular posts from this blog

உயிரற்ற உறவுகள்

பணியிடங்களில் பாலியல் தொல்லை ஆண்களுக்கு இல்லையா?

கை கழுவ சொல்லிக்கொடுங்கள்