மழையைப்பற்றிய குறிப்புகள்
பெருமழைக்குப்பிறகு மனித முகங்கள் உயிர் பெற்றுவிடுகின்றன.மனிதன் என்றில்லை,புவியின் அத்தனை உயிர்களும்தான்.மழை செழிப்பைக் கொண்டு வருகிறது.மனித மனத்தின் ஆழத்தில் மழைக்கான ஏக்கம் இருந்து கொண்டிருக்கிறது.பூமி மட்டுமல்லாமல் மனித மனமும் குளிர்ந்து உவகை அடைகிறது.மனிதர்கள் சந்தோஷமான வார்த்தைகள் பேசுவதை நீங்கள் கவனிக்கமுடியும். மழை மனங்களில் அமைதியைக்கொண்டு வருகிறது.அமைதியான மனம் நல்ல தூக்கத்தைக் கொடுக்கும்.நல்ல கோடை மழைக்கு அடுத்தநாள் காலை.`` இரவு நன்றாக தூங்கியிருப்பீர்களே``என்று நண்பர் கேட்டார்.அவரது முகமெல்லாம் சந்தோஷம்.அது உண்மைதான்.புழுக்கமும் வியர்வையும் காணாமல் போய் இதமான சூழல் நிலவியது. நிறைய முறை மழையில் நனைந்திருக்கிறேன்.நிலத்திலிருந்து வீட்டுக்கு வந்து சேர இரண்டு கிலோமீட்டர் நடக்கவேண்டும்.விட்டுவிட்டு தொடர் மழை பெய்து கொண்டிருந்தது.குடைபிடித்து நடந்து கொண்டிருக்கிறேன்.தூறல் பெருமழையாக மாறிவிட்டது.வழியில் அரைகிலோமீட்டருக்கு ஒரு வீடுதான் இருக்கும்.ஒதுங்குவதற்கு இடமில்லை.குடையைத்தாண்டி நனைந்துவிட்டேன். வழியில் ஏரியைக் கடந்து செல்லவேண்டும்.ஏரி முழுக்க நீர் நிரம்பிவிட்டது.கிட்டத்தட்ட இடுப...